ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழு (SPT), 2026 ஜூன் 15 முதல் 24 வரை இலங்கைக்குத் தனது இரண்டாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்தேர்வு நெறிமுறையில் (OPCAT) இலங்கை 2017 டிசம்பரில் இணைந்ததைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழுவானது (SPT) தனது இலங்கைக்கான முதல் பயணத்தை 2019 ஏப்ரலில் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்தேர்வு நெறிமுறையின் (OPCAT) கீழ் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது (HRCSL) இலங்கை அரசாங்கத்தால் தேசிய தடுப்புப் பொறிமுறையாக (NPM) நியமிக்கப்பட்டது.
எதிர்வரும் தமது விஜயத்தின் போது, நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழுவானது (SPT) அமைச்சர்கள் மட்டத்தில் சந்திப்புகளை நடத்துவதோடு, தொடர்புடைய அரசாங்க அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தூதுக்குழுவானது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளையும், குடிமைச் சமூக உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையுடனான தனது தொடர்ச்சியான ஈடுபாட்டுக் கொள்கைக்கு இணங்கவும், அரசியலமைப்பிற்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட சர்வதேச ஆவணங்களில் பொறிக்கப்பட்டுள்ள மற்றும் தானாக முன்வந்து மேற்கொள்ளப்பட்ட தனது உடன்படிக்கை அமைப்பின் கடமைகளை நிறைவேற்றும் வகையிலும், இலங்கை அரசாங்கம் இத்துணைக்குழுவுடன் வெளிப்படையானதும், ஆக்கப்பூர்வமானதும் மற்றும் ஒளிவுமறைவற்றதுமான முறையில் ஈடுபடும்.
இத்தூதுக்குழுவில் செல்வி ஐஷா ஷுஜுன் முஹம்மது (மாலைத்தீவு) (தூதுக்குழுத் தலைவர்); திரு. ஜேகப் ஜூலியன் செபெக் (போலந்து); செல்வி அனிகா டொம்சிக் (க்ரோஷியா); மற்றும் திரு. நிகா க்வாராட்ஸ்கெலியா (ஜோர்ஜியா) ஆகியோர் இடம்பெறுவார்கள். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள துணைக்குழு செயலகத்தின் அதிகாரிகளும் அவர்களுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொள்வார்கள்.
தூதுக்குழுவின் இவ்விஜயமானது, அவர்களின் ஆணையின்படி மேற்கொள்ளப்படும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026 ஜூன் 12

