
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி (SRSG-VAC) கலாநிதி நஜாத் மல்லா மிஜித் அவர்கள், 2026 ஜூன் 21 முதல் 27 வரை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். தனது வருகையின் போது, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (SAARC), இலங்கை அரசாங்கம், தெற்காசியாவிற்கான யுனிசெஃப் பிராந்திய அலுவலகம் (UNICEF ROSA), உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் SRSG-VAC அலுவலகம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட, சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெற்காசிய அமைச்சர்கள் மாநாட்டில் (SAMC-EVAC) ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி சிறப்புரையாற்றினார். பிராந்திய மாநாடு 2026 ஜூன் 23-24 திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது.
தனது தொடக்க உரையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி மஜித் அவர்கள், பெருகிவரும் உலகளாவிய பிளவுகளுக்கு மத்தியில், சிறுவர் பாதுகாப்பை மேம்படுத்துவதில் பல்தரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், அனைத்துச் சூழல்களிலும் சிறுவர்களுக்கு எதிரான எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த, இப்பிராந்திய நாடுகளுக்கு இம்மாநாடு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது பயணத்தின் போது, சிறுவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி மஜித், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார். மேலும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்; பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்; மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார ஆகியோரையும் சந்தித்தார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது, மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும் பதிலளிக்கவும் பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவை மேம்படுத்துவது ஆகியவற்றில் இக்கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் ஆதரவுடன் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் நிறுவப்பட்டு, 2025, செப்டம்பரில் திறந்து வைக்கப்படவுள்ள இலங்கையின் முதல் சிறுவர்கள் நேய நீதிமன்ற வளாகத்தைப் பார்வையிடுவதற்காக, சிறுவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி கண்டி உயர் நீதிமன்றத்திற்கும் சமூகமளித்தார்.
சிறுவர் நலனை மேம்படுத்துதல், சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே நிலவும் வலுவான கூட்டாண்மையை சிறப்புப் பிரதிநிதியின் வருகை மீண்டும் உறுதிப்படுத்தியது. இலங்கையானது, சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலான உடன்படிக்கையில் (UNCRC) ஓர் உறுப்பு நாடாக உள்ளதுடன், அதன் முதல் இரண்டு விருப்புத்தேரிவு நெறிமுறைகளையும், சிறுவர் தொழிலாளர் பற்றிய முக்கிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) உடன்படிக்கைகளையும் அங்கீகரித்துள்ளது. மேலும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னோடி உலகளாவிய கூட்டணியிலும் இலங்கை ஓர் உறுப்பினராக உள்ளது.
கலாநிதி நஜாத் மல்லா மஜித், 2019 ஆம் ஆண்டு முதல் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். அவர், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுத்து ஒழிப்பதற்கான உலகளாவிய பிரச்சாரங்களையும் ,கூட்டாண்மைகளையும் முன்னெடுத்து வருகிறார்.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி, சிறுவர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்தல் மற்றும் ஒழிப்பதற்கான ஒரு சுதந்திரமான உலகளாவிய ஆதரவாளர் ஆவார். இந்த ஆணை, சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளின் செயலாக்கத்தை ஊக்குவிப்பதோடு, சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கூட்டு நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை, பிராந்திய அமைப்புகள், தேசிய நிறுவனங்கள், குடிமைச் சமூகம் மற்றும் தனியார் துறை ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026, ஜூலை 30




