Ministry News
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் செயலாளர் நாயகமும், ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான பிராந்திய பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருடனான சந்திப்பு
வெளியிடப்பட்ட தேதி
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளர் நாயகமும், ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான பிராந்திய பணிப்பாளருமான கன்னி விக்னராஜா, இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 2026 ஆகஸ்ட் 03, திங்கட்கிழமை அன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜா, அரசாங்கத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கையின் மீட்சிச் செயன்முறையைப் பாராட்டினார். இந்த முன்னேற்றம் நாட்டின் அபிவிருத்தி பற்றிய உலகளாவிய நேர்மறையான பார்வையையும், நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது என்றும், அது முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சுற்றுலாத்துறையை மேலும் முன்னேற்றுவதற்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் நீண்டகால அபிவிருத்திப் பங்காளியான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP), நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக 2028–2032 காலப்பகுதிக்கான எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (Country Development Programme) மூலம் இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் டிஜிட்டல்மயமாக்கல் முயற்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஊக்குவிப்பு, இலங்கை தொழிலாளர்களின் திறன் மற்றும் ஆற்றல்சார் அபிவிருத்தி, காலநிலை கடன்கள், பசுமை மற்றும் நீலப் பிணைப்பத்திரங்கள் மற்றும் புத்தாக்கமிக்க நிதித் தீர்வுகள் உள்ளிட்ட காலநிலை நிதியளிப்பு, சுகாதாரம், அத்துடன் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) வழங்கும் ஆதரவு குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பிராந்திய பணிப்பாளர் என்ற பதவியில் உதவிப் பொதுச் செயலாளர் விக்னராஜா வழங்கிய ஆதரவிற்கு வெளிநாட்டு அமைச்சர் ஹேரத் தனது பாராட்டைத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜா, தனது உத்தியோகபூர்வ பயணத்தின் போது, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்துறையின் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோரையும் சந்தித்தார். மேலும், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், தூதுவர்கள் மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி பங்காளிகளுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொண்டார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP), 55 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால அபிவிருத்திப் பங்காளராக இருந்து, நிலைபேறான பொருளாதார அபிவிருத்தி, ஜனநாயக ஆட்சிமுறை, காலநிலை நடவடிக்கை, பேரிடர் மீள்திறன் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை ஆதரித்து வருகிறது. நிதி நெருக்கடியிலிருந்து இலங்கையின் பொருளாதார மீட்சியின் போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது, தனது உதவியை நீட்டித்துள்ளதுடன், சமீபத்தில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆரம்பகால மீட்சி மற்றும் மீள்திறன் கட்டமைப்புசார் முன்முயற்சிகள் மூலம் உதவியுள்ளது.
உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜா, தற்போது ஐக்கிய நாடுகள் முறைமையில் உள்ள மிக உயர்ந்த பதவியில் இருக்கும் இலங்கையைச்சேர்ந்த அதிகாரி ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புமிக்க பணி அனுபவத்தைக் கொண்டுள்ள அவர், ஆபிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் ஆகிய பிராந்தியங்களிலும், ஜெனீவா மற்றும் நியூயோக் ஆகிய இடங்களிலும் சிரேஷ்ட தலைமைப் பதவிகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஆகஸ்ட் 05



Show as Media Release on Homepage

