இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் மயமாக்கல், இணைப்பு, புத்தாக்கம் மற்றும் மனித மூலதன அபிவிருத்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை அடையாளம் காண்பதற்கும் முக்கியமான தளத்தை வழங்கும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கும், ஓமான் சுல்தானகத்திற்கும் இடையிலான நான்காவது சுற்று இருதரப்பு ஆலோசனைகள் 2026, ஆகஸ்ட் 3 அன்று மஸ்கட்டில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ தலைமை தாங்கியதுடன், ஓமானிய தூதுக்குழுவிற்கு ஓமானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் துணைச் செயலாளர் ஷேக் கலீஃபா பின் அலி பின் இசா அல் ஹார்த்தி தலைமை தாங்கினார்.
இவ்வாலோசனைகள் இலங்கை-ஓமான் உறவுகளின் வலுவான அடித்தளத்தையும், பாரம்பரிய பகுதிகளுக்கு அப்பால் கணிசமான பொருளாதார ஆற்றலுடன் வளர்ந்து வரும் துறைகளுக்கு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான பகிரப்பட்ட ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் முதலீட்டை எளிதாக்குவதற்கும் தனியார் துறை கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு சிறப்பு வர்த்தக ஏற்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
டிஜிட்டல் மாற்றத்தில் ஓமானின் குறிப்பிடத்தக்க சாதனைகளை, குறிப்பாக பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் அரசதுறையில் புத்தாக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் பயனுறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவதில் அதன் அனுபவம் ஆகியவற்றை இலங்கை வரவேற்றது, . டிஜிட்டல் பொருளாதாரத்தை எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக அங்கீகரித்து, டிஜிட்டல் ஆளுகை, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முயற்சியாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆராயும் போது நிபுணத்துவம், சிறந்த
நடைமுறைகள் மற்றும் புத்தாக்கமயமான தீர்வுகளின் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இரு தரப்பினரும் இணங்கினர்.
பிராந்திய கடல்சார் மூலோபாய அமைவிடம், ஏற்பாட்டியல் மற்றும் கப்பல்மூல சரக்கு ஏற்றியிறக்கல் மையமாக ஓமானின் மூலோபாய நிலையை அங்கீகரித்தல் மற்றும் மேம்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாட்டிற்கான நுழைவாயிலாக செயற்படும் திறனையும் எடுத்துக்காட்டுவதுடன், இரு தரப்பினரும் நேரடி கடல் மற்றும் விமான சரக்கு இணைப்புகள் மூலம் இணைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) நிறுவக உறுப்பினர்களாக தங்கள் பகிரப்பட்ட பங்கைக் கட்டியெழுப்பியதன் மூலம், இரு தரப்பினரும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பானதும், நிலையானதும் மற்றும் செழுமையானதுமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு பங்களிப்பதற்கும் தங்கள் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் பயிற்சி மற்றும் முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேற்கொண்டு, ஓமானின் தொலைநோக்கு- 2040 (Oman Vission 2040) உடன் இணைந்த வாய்ப்புகள் மற்றும் இலங்கையின் பொருளாதார மாற்றத்திற்கான முன்னுரிமைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் மேலும் ஆராயப்பட்டன. இரு தரப்பினரும் வணிகங்களுக்கிடையிலான இணைப்புகளை மேம்படுத்துதல், தனியார் துறை ஈடுபாட்டை அதிகளவில் ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
ஓமானில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் ஏறத்தாழ 28,000 இலங்கை பிரஜைகளின் பெறுமதிமிக்க பங்களிப்பை அங்கீகரித்த செயலாளர் ரணராஜ, இலங்கை சமூகத்திற்கு ஓமானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு பாராட்டு தெரிவித்ததுடன், ஓமானின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் முக்கிய பங்களிப்பை எடுத்துக்காட்டினார். இலங்கை பணியாளர்களின் தொழில்முறை, ஆற்றல் மற்றும் நேர்மறையான பங்களிப்பை ஓமானிய துணைச் செயலாளர் பாராட்டினார்.
தொடர்ந்து உயர்மட்ட ஈடுபாட்டைப் பேணுவதற்கும், ஐந்தாவது சுற்று இருதரப்பு ஆலோசனைகளை கொழும்பில் கூட்டுவதற்கும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டதனைத்தொடர்ந்து, இந்த ஆலோசனைகள் முடிவடைந்தன. இந்த ஆலோசனையின் ஒரு புறம், செயலாளர் அருணி ரணராஜ, ஓமான் தொழிலாளர் அமைச்சின் துணைச் செயலாளரும், பொறியியலாளருமான காலித் அல்-கம்மாரியுடன் தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். திறமையான இலங்கை நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், நிலுவையில் உள்ள இருதரப்பு தொழிலாளர் ஏற்பாட்டை விரைவுபடுத்துதல் மற்றும் குடிவரவு அல்லது வீசா தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் இலங்கைப் பணியாளர்களுக்கு பொருத்தமான சட்ட நடைமுறைகள் அல்லது திருப்பி அனுப்பும் ஏற்பாடுகள் முடிவடையும் வரை பொருத்தமான இடைக்கால ஆதரவு பொறிமுறைகளை நிறுவுதல் குறித்து கலந்துரையாடப்பட்டது. ஓமானில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாதுகாப்பானதும், ஒழுங்கானதும் மற்றும் பரஸ்பர நன்மை பயக்குமானதுமான தொழிலாளர் இயக்கத்தை ஊக்குவிப்பதில் இரு தரப்பினரும் தங்கள் பகிரப்பட்ட ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
செயலாளர் அருணி ரணராஜ, ஓமான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சர்வதேச வர்த்தகம், அறிவுசார் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் திணைக்களத்தின் தலைவர் தூதுவர் துஃபூல் அல் தஹாப் அவர்களையும் சந்தித்தார். இலங்கை தொழில்நுட்ப தொடக்க முயற்சிகள் மற்றும் ஓமானிய நிறுவனங்களுக்கு இடையே குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டமையானது, புத்தாக்கம் சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் அறிவுசார் பொருளாதார இணைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் பகிரப்பட்ட ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
இந்த விஜயத்தின் போது, ஓமான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அழைப்பின் பேரில் செயலாளர் அருணி ரணராஜ, ஓமன் இராஜதந்திர கல்வியியற் கல்லூரியில், “இலங்கை-ஓமான் உறவுகள்: எதிர்காலத்திற்கான ஒரு கூட்டுறவு” என்ற தலைப்பில் சிறப்புரையை நிகழ்த்தினார். விரிவுரையில் ஓமான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர அணியினர் கலந்து கொண்டனர்; அதைத் தொடர்ந்து கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. செயலாளர் ரணராஜ, கல்வியியற் கல்லூரியின் தலைவரும், தூதுவருமான ஷேக் ஹுமைட் அல் மானியுடன் இராஜதந்திர பயிற்சி மற்றும் திறநிசார் மேம்பாட்டில், விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.
ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் கபில டி அல்விஸ்; மத்திய கிழக்குப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.டி.எஸ்.பி. விஜேகுணசேகர; ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிபர் மெக்ஸ்வெல் கீகல்; மற்றும் ஆலோசகர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) ஹேமந்த விஜேரத்ன, செயலாளர் ரணராஜ ஆகியோர் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டுடன், இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 45 வது ஆண்டு நிறைவின் பின்னணியில் இடம்பெற்ற இந்த விஜயம், இலங்கைக்கும், ஓமான் சுல்தானகத்திற்கும் இடையிலான நீண்டகால நட்பை பரந்ததும், ஆற்றல்மிக்கதும் மற்றும் எதிர்காலம் சார்ந்த மூலோபாய பங்காளித்துவமானதுமாக உயர்த்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஆகஸ்ட் 04

