Ministry News
ஹெல்சின்கியில் நடைபெற்ற இரண்டாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ​​கைச்சாத்தாகிய இலங்கை பின்லாந்து அரசியல் ஆலோசனைப் பொறிமுறை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
வெளியிடப்பட்ட தேதி
Sri Lanka and Finland sign Memorandum of Understanding on Political Consultation Mechanism at the Second Round of Bilateral Political Consultations  in Helsinki

இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான இரண்டாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள், 2026 பெப்ரவரி 25 அன்று ஹெல்சின்கியில் நடைபெற்றன; இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலமானதும், சுமுகமானதுமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும், 1954 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகளை வகைப்படுத்தும் நீடித்த நட்பைப் பிரதிபலிப்பதிலும் மிகமுக்கிய படியொன்றாக விளங்குகிறது.

இந்த ஆலோசனைகளின் முக்கிய சிறப்பம்சமாக, இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானமையானது, இலங்கை - பின்லாந்து உறவுகளில் மைல்கல்லொன்றாகும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, கூட்டாண்மையை புதிய உயர் மட்டங்களுக்கு உயர்த்துவதற்கான பகிரப்பட்ட உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், அரசியல் உரையாடலுக்கான, கட்டமைக்கப்பட்டதும், வழமையானதுமான செயற்பாட்டு சட்டகம் மற்றும் ஒத்துழைப்பினை நிறுவனமயமாக்குகிறது.

இவ்வாலோசனைகளானவை, இருதரப்பு ஒத்துழைப்பின் முழு அளவையும் மதிப்பாய்வு செய்வதற்கும், 2018 ஆம் ஆண்டு தொடக்கச் சுற்றுக்குப் பிறகு அடைந்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், ஒத்துழைப்புக்கான புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் விரிவான தளமொன்றை வழங்கின. ஆலோசனைகளில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் தனியார் துறை ஈடுபாட்டை உள்ளடக்கப்பட்டிருந்தது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு பாய்ச்சல்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான திறனை பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டதுடன், வணிகங்களுக்கிடையிலான  கூட்டாண்மைகள் மற்றும் புதுமை சார்ந்த ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். பரஸ்பர ஆர்வம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இரு பிரதிநிதிகளும் பன்முகத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் நோக்கங்களை நிலைநிறுத்துவதற்கான தங்கள் வலுவான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

தொழில்முறைசார் இயக்கத்தை எளிதாக்குதல் மற்றும் கடற்துறைசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வளர்ந்து வரும் தொழிலாளர் சந்தைசார் தேவைகளுடன் இணைந்த திறன்சார் அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் வானிலை தரவு பகிர்வு மற்றும் திறன்சார் அபிவிருத்தி உள்ளிட்ட தொழிற்கல்வி மற்றும் பயிற்சியில் (VET) ஒத்துழைப்பு போன்ற பல முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.

இரு நாடுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பின்லாந்தில் உள்ள இலங்கை வெளிநாட்டினர் சமூகத்தின் முக்கிய பங்களிப்பை அங்கீகரித்து, பின்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கவனம் செலுத்தப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப மறு ஒருங்கிணைப்புக்கான விசாக்களைப் பெறுவதில் இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இலங்கை பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். பின்லாந்தில் உயர்கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கு வீசா வழங்குவதை விரைவுபடுத்த, கொழும்பில் விசா மையத்தை நிறுவுவது மற்றும் வீசா ஆவணங்களின் சரிபார்ப்பை மேலும் நெறிப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு பின்லாந்து தரப்பினை இலங்கை கேட்டுக் கொண்டது. கல்வி பரிமாற்றங்கள், தொழில்முறை ஈடுபாடு மற்றும் மக்களிடையேயான தொடர்பை மேம்படுத்துவதற்காக இயக்கம் சார்ந்த கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பினரும் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த ஆலோசனைகள் GSP + தொடர்பான விடயங்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஈடுபாட்டையும் உள்ளடக்கியிருந்தது. இலங்கையின் பொருளாதார நிலைப்படுத்தல், மீட்சி மற்றும் மீள்தன்மையை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து அளித்து வரும் உதவிக்கு இலங்கைத் தரப்பு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.

தித்வா சூறாவளியைத்தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் மத்திய அவசரகால பதிலளிப்பு நிதியம் (UN CERF) மூலம் பின்லாந்து அளித்த பங்களிப்பிற்கு பின்லாந்து அரசாங்கத்திற்கு இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவில், பின்லாந்திற்கு அங்கீகாரம் பெற்ற ஸ்டாக்ஹோமில் உள்ள இலங்கைத் தூதுவர் கபில பொஃன்சேகா மற்றும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் சச்சினி டயஸ் ஆகியோர் உள்ளடங்குவர். பின்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஜாரி சின்காரி தலைமையிலான பின்லாந்து பிரதிநிதிகள் குழுவில், பின்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்குவர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

2026, பெப்ரவரி 26

Sri Lanka and Finland sign Memorandum of Understanding on Political Consultation Mechanism at the Second Round of Bilateral Political Consultations  in HelsinkiSri Lanka and Finland sign Memorandum of Understanding on Political Consultation Mechanism at the Second Round of Bilateral Political Consultations  in Helsinki